
சேஷனுக்கு, முந்தைய தேர்தல் காலக்கட்டத்தில்... 1980..களில், கிராம, பிரச்சாரங்களில் ஒலி பெருக்கியில் ஒரு வாசகம் அடிக்கடி, கர கர குரலில் நம்மால் கேட்க பட்டதாயிருக்கும்....! அது “ உங்களது பொன்னான வாக்குகளை, ”இன்னாருக்கு”.... அளிக்க..”மறந்தும் இருந்து விடாதீர்கள்...இருந்தும் மறந்து விடாதீர்கள்” என்பதானது அது...!
அதை நினைவூட்டும் விதமாகவே..ஜூன் மாத முதல் வாரத்தில் நடைபெற்ற ஒரு நண்பரின் திருமணத்திற்கு அது நடைபெறும், ஒன்பதிலிருந்து பத்தரை மணி முகூர்த்த நேரத்திற்கு, முன்பதாகவே... வழக்கத்திற்கு மாறாக... மிகுந்த ஆர்வம் காரணமாக .சென்று விட்டேன்....!
திருமணம் செய்து கொள்ளும் அந்த நண்பர் உள்ளாட்சி துறையில், ஒரு சிற்றுராட்சியில் ”கிளர்க்”காக பணியாற்றுகிறார்..தாய் உண்டு, தந்தை இல்லை..அவரின் ஒரே, மூத்த சகோதரருக்கு, ஏற்கெனவே, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.. போட்டோ கலைத்துறை, கம்பியூட்டரில் மிகுந்த திறமைசாலியான அவர், நிரந்தர வேலை இல்லாமல், சுழி சும்மா இருக்க விடாமல், கடனாளியாகி குடும்பத்திற்கு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறார்..!
சுமார் ஒரு லட்சத்திற்கு மேலாக, மூத்த சகோதரருக்கு ஏற்பட்ட கடன் தொகை குடும்பத்தினரால் குறிப்பாக எனது நண்பரால் தீர்க்கப் பட்டிருக்கிறது..! இதை போலவே முன்பும், பல முறை,தொகை சற்று கூடக் குறையவோ, பொறுப்பற்ற, அவரின் ஊதாரித்தனத்தால் அழிக்கப் பட்டது வேறு விஷயம்..!
அப்போது தான், எனது நண்பரின் குடும்பத்தினர் எதிர்பாரா வண்ணம் அந்த நிகழ்வு நடந்து விட்டது.. பிரச்சினைக்குரிய மூத்த சகோதரர், அம்மா, தம்பி, மனைவி, பெண் குழந்தை இவர்களை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, எவ்வித முதன்மையான காரணங்களும் இன்றி தலைமறைவாகி,...காணாமல் போய் விட்டார்...!
நண்பர், தனது சகோதரரை தேடாத இடம் இல்லை.. உயர் நீதி மன்றத்தில் ஆட் கொணர்வு மனு வரையிலும் போயாகி விட்டது..! காவல் நிலையங்களிலும்....தனிப்பட்ட தேடல் என..தொடர்ந்து பாலோ அப் செய்தும், அவர் கிடைக்க வில்லை..! யாரோ ஒரு வியாபாரி..அவரை கோயம்புத்தூரில் கண்டதாக.. கிடைத்த அரை குறை..சிறு தகவல் மட்டுமே.. அவர் இருப்பை தெரிவிக்கும் நம்பிக்கையாக மாறியது..!
எதாவது போன் வந்து, எதிர்முனையில் சற்று பேச தாமதமானால், காணாமல் போனவரின் தாய்..”தம்பி வந்து விடப்பா...உன்னை எதுவும் கேட்கமாட்டோம்.. நீ வந்தால் போதும்..”என்று புலம்பும் மன நிலைக்கு வந்து விட்டார்..! இந்த நிலையில் தான், தனது பெரிய அண்ணன் காணாமல் போன நிலையில், பல முறை தனது திருமணம் தள்ளிப் போட்ட நண்பர்.. வருடங்கள் உருண்டோடிய நிலையில், வேறு வழியின்றி, மாமா பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்..! இந்த திருமணத்தை கேள்விப் பட்டு.. அதற்காவது காணாமல் போன சகோதரன் திரும்பி விடுவான்..என்ற நப்பாசை, நம்பிக்கையையும் மேலோங்க...!
திருமணம் முடிந்தது... !..யார் இந்த திருமணத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோமோ....யார் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டதோ....!?!..அவர் கடைசி வரை வரவில்லை...! காணாமல் போனவரின் மனைவி,குழந்தை அவர்கள் தரப்பு உறவினர்கள் முகத்தில் ஒரு வித சோக களை..குடியிருந்தது..! ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக் கொண்டு..கண்களால் சோக இரகசிய செய்தியை..பரிமாறிக்கொண்டு பிரிந்தனர்...!
காணாமல் போனவரின், எனது நண்பரின் தாய்...சமையல் நடைபெறும் பகுதிக்கு சென்று... யாரும் பாராவண்ணம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்..!
இந்த சம்பவத்தை போலவே.....ஒரு சமயத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்த நண்பர்..அருண் என்று ஒருவர் இருந்தார்..! அவரின் தொடர்பு..அனுபவம் இவற்றை அவர் பயன் படுத்திக் கொண்டதை விட..அதனை நான் பயன் படுத்திக் கொண்டதே அதிகம்..!
அருண்...தலைமையாசிரியரின் ஒரே மகன்..உயர் வகுப்பினை சார்ந்த அவருக்கு..மிகுந்த செல்வாக்குள்ள உறவினர்கள்.. நண்பர்கள்..தந்தையிடம் படித்த .. நல்ல பணியில் உள்ள....எதையும் செய்யக்கூடிய ..உதவக் கூடிய மாணவர்கள் நிறைய பேர் இருந்தும் எதையும் அவர் பயன் படுத்தி வாழ்வில் நிலையாக எதையும் செய்ய வில்லை..! காலதாமதமான திருமணத்தின் வழி மனைவியும் ஒரு பெண்குழந்தையும் உண்டு..!!
அருண், பேச ஆரம்பித்தால்..எல்லாம் நெகட்டிவான செய்திகளாகவே இருக்கும்...! அதாவது தொழிலில் அனைத்தையும் இழந்து நடு ரோட்டுக்கு வந்தவர்கள், திடிரென குடும்பத்தை விட்டு காணாமல் போனவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என சுவாரசியமான கதைகள்..மணிக்கணக்கில் நீளும்...! பலமுறை .பலரிடம் திரும்ப.. திரும்ப...மறு ஒலிபரப்பாக.. ஆர்வமுடன் கால்களை ஆட்டிக் கொண்டு..அதே விதமாக.. அலுப்பு தட்டாமல்..அதாவது அவருக்கு..!?! சொல்லிக் கொண்டுருப்பார்..!
பின்னாளில்..அவரின் பேச்சு குறைந்து..அதுவும் சுத்தமாக நின்று..ஒரு வித மூளை செயலழிப்பு ..என்னவென்று புரியாத நோய்க்கு ஆளாகி...சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு..ஒரு நாளில் அங்கிருந்து..யாரும் அறியா வண்ணம்.. அவரின் வார்த்தையிலேயே கூறுவதனால்..” ஒன் ஃபைன் டே மார்னிங்”வெளியேறி.. காணாமலும் போய் விட்டார்.?! ..இன்று வரை எங்கிருக்கிறார்..? என்ன ஆனார்..?? உயிருடன் உள்ளாரா..?!? எதுவுமே தெரியாது..?
ஒரு சில வருடங்களில் அவரின் தாயும் இறந்து விட்டார்..! மனைவி, குழந்தை, காணாமல் போனவரின் வயதான தந்தை..ஆகிய மூவரும்..மிகுந்த மனப் பாரத்துடன்.. வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்..! அதிலும் அந்த சுட்டியான பெண் குழந்தை..?..மிகுந்த ஆளுமையும், அறிவும், எத்தனையோ வாய்ப்புகள், நண்பர்களின் உதவிகள் என பன்முகத்தன்மையோடு, செல்லமாகவும், செல்வாக்காகவும் இருந்த..காணாமல் போன.. நண்பரின்.. குடும்பத்தை காண அஞ்சி.தைரியமற்றுபலரும் அங்கு செல்வதை தவிர்த்து விட்டோம்..?!!?
அவர் இரசிக்க... இரசிக்க...கூறிய எதிர்மறை கதைகள் போலவே..அவரின் வாழ்க்கை கதையும்...எதிலும் பிடிப்பு இல்லாமல்..காற்றில் பறக்கும் காகிதம் போல அங்கும்... இங்கும் அலைந்து.. கடைசியில் கானாமல் போனதாக அமைந்தது தான்...விசித்திரம்..!!
காணாமல் போனவர்கள்..தற்கொலை செய்து கொண்டு அடுத்தவரின்..தன்னை சார்ந்தவரின்..குடும்பத்தை பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு.. ஒரு வித சாடிச மனப்பான்மையோடு...யார் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என....அவர்கள் இல்லாமல் போய் விட்டால் அதோடு மொத்த உலகமும் இல்லாமல் போய் விடுகிறது...அதாவது அவர்களுக்கு..!!
ஆனால் நமக்கு அப்படி அல்லவே..!?! “ செத்து தொலைப்பதை விட..வாழ்ந்து தொலைக்கலாம்..!!??! என்பதே...வாழ்பவர்களின்...வாழ நினைப்பவர்களின்...வாழ வைப்பவர்களின் மன நிலையாக இருக்கிறது..!! இருக்க வேண்டும்..!!
வாழ்வில் ஒன்று.... ஒன்றாய் சேர்ப்பது அறிவு...!!.அதுவே ஒன்று..... ஒன்றாய் விட்டு ஒழிப்பது ஞானம்..!! நாம் ஞானியாக இருக்க தேவையில்லை.. குறைந்த பட்ச..அறிவாளியாக மட்டும் இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன்...!?!!
அதுவும்.....அந்த..விட்டு ஒழித்த ஞானிகளை நினைக்கவும்....அவர்களை தேடவும்....கண்டு பிடிக்கவும்...ஒரு வேளை அவர்கள் நள்ளிரவில் திரும்பி வந்தால்..வாசல் கதவைத் திறக்கவும்..! பசியுடன் இருந்தால் சோறு போடவும்,அது எதுவுமே...முடியாத நிலையில்.. அவர்களால் உண்டாக்கப் பட்ட...இழப்பை..அவர்களின் இருப்பில்லா நிலையை..சரி செய்யவும்....வாழ்கைக் கண்ணி, சங்கிலி தொடர் அறுபடாமல் காப்பாற்றப் படவும்.......!?!..என்ன நான் சொல்வது சரிதானே..??
நாக.பன்னீர் செல்வம் ..Naga.Panneer Selvam
sarithan
பதிலளிநீக்கு