சனி, 29 ஜூலை, 2017

பிக் பாஸ்: ஒவியாக்களில்,.. அவர்களும்..ஜூலிக்களில்,. நாமும்..!?!

     

        நீங்கள் ..”பிளாக்கிஷ் பீப்பிள்”..உங்களை நம்ப முடியாது..!எனக்கு உங்களை எல்லாம் பிடிக்காது..! இதனை என்னிடம் முகத்தில் அடித்தாற் போல சொன்ன..கேரளாவை சேர்ந்த  உன்னி மாதவனுக்கு,..முப்பது வயதுக்கும் மேலிருக்கும்..!

       எனக்கு, அப்போது வயது இருப்பத்திரண்டு..! இடம் டெல்லி.. வருடம் 1989..ஒரு சிபிஎஸ்சி பள்ளி பணியில்.. நான், புதிதாய் சேர்ந்திருந்த  சமயம் அது..! இத்தனைக்கும் நான் ஒன்றும் அவ்வளவு கறுப்பில்லை..!! அது பொதுவான தமிழர் குணத்தின் மீதான..ஒரு..மலையாளியின்  தாக்குதல்..!

       உன்னி மாதவன், மலையாளி.., அமித் தத்தா,இன்னொரு.. ஏதொவொரு தத்தா..இருவரும் வங்காளிகள்..மேலும் இரவி என்று திருச்சிக்காரர்.. பிராமின் இவர்களெல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன் பணியில் சேர்ந்திருந்த சீனியர்(காரர்)கள்..!

     தமிழர்களை எல்லாம் நம்ப முடியாது.. என்று என்னிடம் சொன்ன உன்னி மாதவனோடு... இரவியும் சேர்ந்து கொண்டார்...!!..” ஆமாம்..இவர்களெல்லாம் எங்களை..பிராமின்ஸை.. மிகவும் கொடுமை படுத்தியவர்கள்..பெரியார் பேச்சை கேட்டுக்கொண்டு... சாமி சிலையை எல்லாம் உடைத்து..எங்களை கேவலப் படுத்தி விரட்டி விட்டவர்கள்”..என்று கண்ணில் ஜலம் வைத்துக் கொண்டு..அவர் பங்குக்கு.. அழாத குறையாக புகார் பத்திரம் வாசித்தார்..!

     எனக்கு ஒன்றும் புரியவில்லை..! ஏதோ ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் நான் ஒருவனே பிரதி நிதி..என்பது போலவும்..வைக்கப் படும் குற்றச்சாட்டுக்கு பொறுத்தமில்லாத குற்ற உணர்வுக்கும் ஆளானேன்..! இருந்தாலும் ..அவர்களை சமாளிக்க..” நான் அப்படியில்லை..என்று எதோ முனகி சொல்லி வைத்தேன்..!

      மிகுந்த மனத்தயாரிப்பு, தமது குற்றச்சாட்டுகளின் மீது நம்பிக்கையுடன் இருக்கும் அவர்களை சமாளிக்க, எனக்கு அப்போது அனுபவம், அறிவு, மொழித்திறமை எதுவும் வாய்த்திருக்கவில்லை என்பதே உண்மை..! மேலும் பிழைப்புக்காக.. தூர தேசத்தில்..வேலைத் தேடி சென்ற.. ஒரு  கிராமத்து சிறுவயது காரனிடம்..புதிய இடத்தில்.. எல்லோரிடமும் ஒத்துழைப்பை நாடும் நிலையில்..அங்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமான..விவாதம் போன்ற..எதையும்  நான் உள்ளிட்ட எவரிடமும்..எதிர்பார்க்கவும் முடியாது..!

    போகட்டும்... மலையாளிகளுக்கு.. தமிழைரை பற்றிய குறைவான மதிப்பீடு எப்போதும்.. இருப்பதை..எனது இருபத்திரெண்டு வயதுக்கு பிந்திய பலவருடங்களிலும் கண்டிருக்கிறேன்..! அதன் நிரூபணமாக.கிராமத்து டீக் கடைகளில் கூட.. எம்.ஏ,.. எம்.பில் படித்த மலையாளிகள்..மிக எளிமையாக.. பணிவுடன்.. கடை நடத்துவதையும்..அங்கு நமது ஆட்கள்..சவடால் செய்வதையும்..முட்டாள் தனமாக பேசுவதும்... உதார் விடுவதும்...சாதாரணமாக நடைமுறையில் காணகூடியதாகும்..இது சென்னை.. உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் கூட பொருந்தும்..!

     சொல்வது ஒன்று..செய்வது மற்றொன்று..எனும் ஹிப்போகிராடிக்ஸ் மனப்பான்மை எப்போதும் நமக்கு உண்டு..என்பது கசப்பான உண்மையே..! நாம் செய்வதை சரியாக செய்யாமல்...கடைபிடிக்காமல்...,  மற்றவர் எதையும் சிறப்பாக..தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நாம்..!

      ”பந்திக்கு முந்து..படைக்கு பிந்து”.....” பாம்பு தின்னும் ஊரில்.. நடுக்கண்டம் நமது”எனும் பழமொழிகள்..அதன் உள்ளார்ந்த.. தவறை நியாய படுத்தும்..நழுவும்.. மன சிலாகிப்பு.. நமது தொடர் மன நிலையை உறுதி படுத்துகிறது..!..மனு கொடுக்கும் சாமானியர்கள்.. அதனை பெறும் அரசியல்வாதிகள்.. மந்திரிகள் என.. பரஸ்பரம்..இதை எங்கே கவனிக்க போகிறார்கள்..?!? என்ற அவ நம்பிக்கையும்..அதனை நியாய படுத்தலும்..அரசியல் உண்ணாவிரத கூத்துகளும்..மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் போராளிகளில் ஒரு சிலர் மட்டும் கைதாவதும்...இதரர்..”வீட்டில கொஞ்சம் வேலை”....?!!? என எஸ்ஸாவதும்... நமது இரட்டை குண நலன்களையே எப்போதும் பறை சாற்றுகிறது..?!?

     ஒரு கட்சி உறுப்பினர்..தேர்தல் சமயத்தில்..மற்றொரு கட்சிக்கு..தினப்படி..குவார்ட்டர்..பிரியாணிக்காக கொள்கை பிடிப்புகளை தற்காலிமாக மறந்து..! எதிர் முகாமில்..பணி செய்து விட்டு திரும்பும் போது..சக கட்சி காரர் பார்த்து விட்டால்..அவரிடம்..” நான்..ஏதோ அங்க போய்ட்டு வந்ததா.. நீ நினைச்சிக்கிட்டு இருக்கிற..?ஆனா உனக்கு தெரியாது.. என் மனசு என்னனு..??! நான் எல்லாம்..?!? போ..போ.. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான்..?!?.....என சமாளித்து..தவறை கண்டு பிடித்தவரையே குற்றவாளியாக்கும் வல்லமை குணம் இயல்பாகவே நமக்கு உண்டு..!

     அரசு வழங்கு மாதாந்திர ஓய்வு தொகையை..பெற.. என்னிடம் உதவி பெற அனுகும் ஒரு சில வயதானவர்கள்..” தம்பி..உனக்கு ஒரு 500 ரூபாய் கொடுத்து விடுகிறேன்..என்னை எதிர்பார்க்காமல்..நீயே எல்லாத்தையும் முடித்து விடு..?!?..எனக்கு உத்தரவிட்டு..தாங்களுக்கு ஏதோ முக்கிய வேலை இருப்பதை போலவும்..அறியாமையால்..சேவை உணர்வையும்.. கொச்சை படுத்தி ஊழலாக்க...நினைப்பதையும்..பொதுவாக..அடிப்படையாக.. தாம் செய்ய வேண்டிய கடமைகளை கூட ஆள் வைத்து செய்ய நினைக்கும் மன்ப்பான்மையை எப்படி எடுத்துக் கொள்வது,,?!?

       ஒரு வயதான பெண்..மாதாந்திர உதவித் தொகையை என் மூலம் பெற்றவர்..என்னை ஒரு முன்னிரவில்  சந்தித்து..” தம்பி..மாசப்பணம் வர ஆரம்பித்து விட்டது..! இதை நீதான் வாங்கி கொடுத்தன்னு.. நான் யாரிடம் சொல்ல மாட்டேன்.. நீயும் சொல்லி விடாதே..?!? அப்புறம் உனக்கு தேவையில்லாத ஜோலியாகி எல்லோரும் கேட்பார்கள்..!?!” என்று நன்றிக்கு  பதிலாக...இரகசியமாக..எனக்கு   அறிவுரை சொன்ன அனுபவமும் உண்டு..?!?

       பேருந்து பயணத்தில்.. நடத்துனரிடம் இருந்து..சில்லரையாக திரும்ப..பெற வேண்டிய ஒரு ரூபாய்..ஐம்பது காசுகளுக்கு..கூட..ஒரு சில சாமானியர்கள்..” ஆமாம் இதை வைத்து..மாடி வீடு கட்ட போறேனாக்கும்..!?!”..என சலித்து கொள்வார்கள்..ஆனால்..அந்த சில்லறை இருந்தால்..அதைக்கொண்டு..ஒரு ஊறுகாய் பொட்டலைத்தை, வாங்கி பழைய சோற்றினை சாப்பிடும் நிலையில் தான் இருப்பார்கள்..!! யதார்த்த நிலையை..வசதியாக மறக்கும் பாசாங்கு குணம்...!..மன்னிக்க..இது தான் நாம்..! இதைத்தான் மலையாளிகள்.. நம்மிடம் கண்டுபிடித்து வைத்து இருப்பதாக நம்புகிறேன்..?!?

      சமீபத்திய..மது ஒழிப்பு போராட்டங்கள்..சரியாக.. பனிரெண்டு மணி வரை நடப்பதும்..!?!...அதன் பின் கலைந்து.. கூட்டம்..அதே..கடைக்கு சென்று விடுவதும்..!.....மது ஒழிப்பு மாநாடுகளுக்கு செல்ல..தொண்டர்களுக்கு...வாகன குறிப்பாக  குடிக்கான செலவு...தவிர்க்கவே முடியாமல்..அரசியல் கட்சிகளால் செய்யப் படுவதும்..அல்லது..  மாநாட்டினை  வெற்றிகரமக முடித்து விட்டு திரும்பும் போது மது அருந்தி கொண்டாடுவதும்..! இங்கு சாதாரணமாகி விட்ட..மறைக்க முடியா நிகழ்வுகளே..?!?

       ”தம்பி....எங்க கடைக்கா.. போற..? இந்தா.. மாமனுக்கு ஒன்னு வாங்கிட்டு வா..! என்று முகத்தை திருப்பி வைத்து கொண்டு..பக்க வாட்டில்.. பணத்தை கொடுத்து..தூரத்து கடைக்கு செல்லும் இளைஞனிடம்,....தனது கணவனுக்கு மது வாங்கி வரச்சொல்லும்..வயதான..தன் கணவன் மேல் அன்பான..?!??... கிராமத்து ஏழைப் பெண்..அன்று காலை மதுக் கடை ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ரகளை செய்தவர் என்பதை..என்னாலும் முதலில்..உங்களை போலவே... நம்ப முடியவில்லை..!

     கேரளாவில்.. சாலை ஓரத்தில்..திறந்த வெளியில்..யாரும் சிறு நீர் கழிப்பதில்லை எனும் கூற்றை பொய்யாக முயன்ற.. ஒரு தமிழ் எழுத்தாளர்.. கேரளாவின் கார் பயணத்தில்..அவ்வாறு தான் ஒருவரை கண்டதும்..அதனை சுட்டிக் காட்ட..அவரின் மலையாள வாகன ஓட்டுனரோ..” நீங்கள் வேண்டுமானால் போய் விசாரித்து பாருங்கள்..அது தமிழ் நாட்டை சேர்ந்த கூலி வேலைக்கு..இங்கு ஆளாகவே இருக்கும்”..எனக்கூற உண்மை அவ்வாறே இருந்து,.எழுத்தாளருக்கு தலைகுனிவை தந்தது,..என படிக்க கேட்டிருக்கிறேன்..!

      ஆனால்..இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால்...மலையாளிகளால் குறை கண்டு..சுட்டிக்காட்டப் படும் நமது தமிழ்க் குணம்..வட இந்திய அளவில் தமிழக, கன்னட, ஆந்திர,கேரளாவின் தென்னிந்திய குணமாகவும்...அதே இந்தியாவிற்கு வெளியில்... ஒட்டு மொத்த இந்திய குணமாகவும்..ஐரோப்பிய கண்டங்களில்.. அது ஆசிய குணமாகவும் காணப் படுகிறது..எனவே இது பற்றியெல்லாம் நாம் கவலைப் பட்டு அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்றே தோன்றுகிறது...!?! ஐரோப்பிய ஒன்றியத்தில்..என்னை பார்த்த ஒரு தமிழ் பெரியவர்.. ”என்ன ஊர்க்காரனெல்லாம் இப்பவாவது திருந்திட்டான்களா”..?? என்று கேட்டது குறிப்பிடத்தக்கது..?!?

        இங்கு மட்டுமல்லாது....லண்டனில் குடியுரிமை பெற நம்மவர்கள் நடத்திய நாடகங்களும் ஏராளம்..! கந்த சஷ்டி கவசத்தில்..போட்டோவை ஒட்டி அது..யாழ்ப்பாணத்தின் ஓட்டுனர் உரிமம் என்று கதைத்து,.. காரியத்தை நிகழ்த்தி கொண்டது போன்ற.. ஏராளமான வரலாறுகளும் உண்டு..!?!..மு.வரதராசனார் எழுதுவது போல.இதுவெல்லாம்...”எண்ணி எண்னி இன்புறத்தக்கதாகும்..”!!

       போகட்டும்......!..தலைப்புக்கு வருவோம்..!?!..பிக் பாஸ் ஷோக்களில் நாம்  நேரடியாக பங்கு கொள்ள முடியாத பார்வையாளர்களாக இருக்கலாம்.. ஆனால்.. அதில் பங்கு பெறும் ஓவியாக்களில் மலையாளிகளும்..ஜூலிக்களில் நாமும் .. நமது உன்னத குணங்களும் இருப்பதை,.. மறைக்கவும் ..மறக்கவும் முடியாது..?!? எனவே,... பாவம் ஜூலிக்களை திட்டாதீர்கள்..!!
 நாக.பன்னீர் செல்வம் Naga.panneer selvam










சனி, 8 ஜூலை, 2017

மறந்தும்..இருந்தும்..இறந்தும் போனவர்கள்.....!?!

         


 சேஷனுக்கு, முந்தைய தேர்தல் காலக்கட்டத்தில்... 1980..களில், கிராம, பிரச்சாரங்களில் ஒலி பெருக்கியில் ஒரு வாசகம் அடிக்கடி, கர கர குரலில்  நம்மால் கேட்க பட்டதாயிருக்கும்....! அது “ உங்களது பொன்னான வாக்குகளை, ”இன்னாருக்கு”.... அளிக்க..”மறந்தும் இருந்து விடாதீர்கள்...இருந்தும் மறந்து விடாதீர்கள்” என்பதானது அது...!

      அதை நினைவூட்டும் விதமாகவே..ஜூன் மாத முதல் வாரத்தில் நடைபெற்ற ஒரு நண்பரின் திருமணத்திற்கு அது நடைபெறும், ஒன்பதிலிருந்து பத்தரை மணி முகூர்த்த நேரத்திற்கு, முன்பதாகவே... வழக்கத்திற்கு மாறாக... மிகுந்த ஆர்வம் காரணமாக .சென்று விட்டேன்....!

     திருமணம் செய்து கொள்ளும் அந்த   நண்பர் உள்ளாட்சி துறையில், ஒரு சிற்றுராட்சியில் ”கிளர்க்”காக பணியாற்றுகிறார்..தாய் உண்டு, தந்தை இல்லை..அவரின் ஒரே, மூத்த சகோதரருக்கு, ஏற்கெனவே, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.. போட்டோ கலைத்துறை, கம்பியூட்டரில் மிகுந்த திறமைசாலியான அவர், நிரந்தர வேலை இல்லாமல், சுழி சும்மா இருக்க விடாமல், கடனாளியாகி குடும்பத்திற்கு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறார்..!

       சுமார் ஒரு லட்சத்திற்கு மேலாக, மூத்த சகோதரருக்கு ஏற்பட்ட கடன் தொகை குடும்பத்தினரால் குறிப்பாக எனது நண்பரால் தீர்க்கப் பட்டிருக்கிறது..! இதை போலவே முன்பும், பல முறை,தொகை சற்று கூடக் குறையவோ, பொறுப்பற்ற, அவரின் ஊதாரித்தனத்தால் அழிக்கப் பட்டது வேறு விஷயம்..!

      அப்போது தான், எனது நண்பரின் குடும்பத்தினர் எதிர்பாரா வண்ணம் அந்த நிகழ்வு நடந்து விட்டது.. பிரச்சினைக்குரிய மூத்த சகோதரர், அம்மா, தம்பி, மனைவி, பெண் குழந்தை இவர்களை விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, எவ்வித முதன்மையான  காரணங்களும் இன்றி தலைமறைவாகி,...காணாமல் போய் விட்டார்...!

         நண்பர், தனது சகோதரரை தேடாத இடம் இல்லை.. உயர் நீதி மன்றத்தில் ஆட் கொணர்வு மனு வரையிலும் போயாகி விட்டது..! காவல் நிலையங்களிலும்....தனிப்பட்ட தேடல் என..தொடர்ந்து பாலோ அப் செய்தும், அவர் கிடைக்க வில்லை..! யாரோ ஒரு வியாபாரி..அவரை கோயம்புத்தூரில் கண்டதாக.. கிடைத்த அரை குறை..சிறு தகவல் மட்டுமே.. அவர் இருப்பை தெரிவிக்கும் நம்பிக்கையாக மாறியது..!

       எதாவது போன் வந்து, எதிர்முனையில் சற்று பேச தாமதமானால், காணாமல் போனவரின் தாய்..”தம்பி வந்து விடப்பா...உன்னை எதுவும் கேட்கமாட்டோம்.. நீ வந்தால் போதும்..”என்று புலம்பும் மன நிலைக்கு வந்து விட்டார்..! இந்த நிலையில் தான், தனது பெரிய அண்ணன் காணாமல் போன நிலையில், பல முறை தனது திருமணம் தள்ளிப் போட்ட நண்பர்.. வருடங்கள் உருண்டோடிய நிலையில், வேறு வழியின்றி, மாமா பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்..! இந்த திருமணத்தை கேள்விப் பட்டு.. அதற்காவது காணாமல் போன சகோதரன் திரும்பி விடுவான்..என்ற நப்பாசை, நம்பிக்கையையும் மேலோங்க...!

     திருமணம் முடிந்தது... !..யார் இந்த திருமணத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோமோ....யார் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டதோ....!?!..அவர் கடைசி வரை வரவில்லை...! காணாமல் போனவரின் மனைவி,குழந்தை அவர்கள் தரப்பு உறவினர்கள் முகத்தில் ஒரு வித சோக களை..குடியிருந்தது..! ஒருவரை ஒருவர் மவுனமாக பார்த்துக் கொண்டு..கண்களால் சோக இரகசிய செய்தியை..பரிமாறிக்கொண்டு பிரிந்தனர்...!

     காணாமல் போனவரின், எனது நண்பரின் தாய்...சமையல் நடைபெறும் பகுதிக்கு சென்று... யாரும் பாராவண்ணம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்..!

     இந்த சம்பவத்தை போலவே.....ஒரு சமயத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்த நண்பர்..அருண் என்று ஒருவர் இருந்தார்..! அவரின் தொடர்பு..அனுபவம் இவற்றை அவர் பயன் படுத்திக் கொண்டதை விட..அதனை நான் பயன் படுத்திக் கொண்டதே அதிகம்..!

     அருண்...தலைமையாசிரியரின் ஒரே மகன்..உயர் வகுப்பினை சார்ந்த அவருக்கு..மிகுந்த செல்வாக்குள்ள உறவினர்கள்.. நண்பர்கள்..தந்தையிடம் படித்த .. நல்ல பணியில் உள்ள....எதையும் செய்யக்கூடிய ..உதவக் கூடிய மாணவர்கள்  நிறைய பேர் இருந்தும் எதையும் அவர் பயன் படுத்தி வாழ்வில் நிலையாக எதையும் செய்ய வில்லை..! காலதாமதமான திருமணத்தின் வழி மனைவியும் ஒரு பெண்குழந்தையும் உண்டு..!!

       அருண், பேச ஆரம்பித்தால்..எல்லாம் நெகட்டிவான செய்திகளாகவே இருக்கும்...! அதாவது தொழிலில் அனைத்தையும் இழந்து நடு ரோட்டுக்கு வந்தவர்கள், திடிரென குடும்பத்தை விட்டு காணாமல் போனவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என சுவாரசியமான கதைகள்..மணிக்கணக்கில் நீளும்...! பலமுறை .பலரிடம் திரும்ப.. திரும்ப...மறு ஒலிபரப்பாக.. ஆர்வமுடன் கால்களை ஆட்டிக் கொண்டு..அதே விதமாக.. அலுப்பு தட்டாமல்..அதாவது அவருக்கு..!?!  சொல்லிக் கொண்டுருப்பார்..!

     பின்னாளில்..அவரின் பேச்சு குறைந்து..அதுவும் சுத்தமாக  நின்று..ஒரு வித மூளை செயலழிப்பு ..என்னவென்று புரியாத நோய்க்கு ஆளாகி...சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு..ஒரு நாளில் அங்கிருந்து..யாரும் அறியா வண்ணம்.. அவரின் வார்த்தையிலேயே கூறுவதனால்..” ஒன் ஃபைன் டே மார்னிங்”வெளியேறி.. காணாமலும் போய் விட்டார்.?! ..இன்று வரை எங்கிருக்கிறார்..? என்ன ஆனார்..?? உயிருடன் உள்ளாரா..?!? எதுவுமே தெரியாது..?

      ஒரு சில வருடங்களில் அவரின் தாயும் இறந்து விட்டார்..! மனைவி, குழந்தை, காணாமல் போனவரின் வயதான தந்தை..ஆகிய மூவரும்..மிகுந்த மனப் பாரத்துடன்.. வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்..! அதிலும் அந்த சுட்டியான பெண் குழந்தை..?..மிகுந்த ஆளுமையும், அறிவும், எத்தனையோ வாய்ப்புகள், நண்பர்களின் உதவிகள் என பன்முகத்தன்மையோடு, செல்லமாகவும், செல்வாக்காகவும்  இருந்த..காணாமல் போன.. நண்பரின்.. குடும்பத்தை காண அஞ்சி.தைரியமற்றுபலரும் அங்கு செல்வதை தவிர்த்து விட்டோம்..?!!?

       அவர் இரசிக்க... இரசிக்க...கூறிய எதிர்மறை கதைகள் போலவே..அவரின் வாழ்க்கை கதையும்...எதிலும் பிடிப்பு இல்லாமல்..காற்றில் பறக்கும் காகிதம் போல அங்கும்... இங்கும் அலைந்து.. கடைசியில் கானாமல் போனதாக அமைந்தது தான்...விசித்திரம்..!!

       காணாமல் போனவர்கள்..தற்கொலை செய்து கொண்டு அடுத்தவரின்..தன்னை சார்ந்தவரின்..குடும்பத்தை பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு.. ஒரு வித சாடிச மனப்பான்மையோடு...யார் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என....அவர்கள் இல்லாமல் போய் விட்டால் அதோடு மொத்த உலகமும் இல்லாமல் போய் விடுகிறது...அதாவது அவர்களுக்கு..!!

       ஆனால்  நமக்கு அப்படி அல்லவே..!?! “ செத்து தொலைப்பதை விட..வாழ்ந்து தொலைக்கலாம்..!!??! என்பதே...வாழ்பவர்களின்...வாழ நினைப்பவர்களின்...வாழ வைப்பவர்களின்  மன நிலையாக இருக்கிறது..!! இருக்க வேண்டும்..!!

      வாழ்வில் ஒன்று.... ஒன்றாய் சேர்ப்பது அறிவு...!!.அதுவே ஒன்று..... ஒன்றாய் விட்டு ஒழிப்பது ஞானம்..!! நாம் ஞானியாக இருக்க தேவையில்லை.. குறைந்த பட்ச..அறிவாளியாக மட்டும் இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன்...!?!!

      அதுவும்.....அந்த..விட்டு ஒழித்த ஞானிகளை  நினைக்கவும்....அவர்களை தேடவும்....கண்டு பிடிக்கவும்...ஒரு வேளை அவர்கள்  நள்ளிரவில் திரும்பி வந்தால்..வாசல் கதவைத் திறக்கவும்..! பசியுடன் இருந்தால் சோறு போடவும்,அது எதுவுமே...முடியாத நிலையில்.. அவர்களால் உண்டாக்கப் பட்ட...இழப்பை..அவர்களின் இருப்பில்லா நிலையை..சரி செய்யவும்....வாழ்கைக் கண்ணி, சங்கிலி தொடர் அறுபடாமல் காப்பாற்றப் படவும்.......!?!..என்ன நான் சொல்வது சரிதானே..??
 நாக.பன்னீர் செல்வம் ..Naga.Panneer Selvam